நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்த பேராலயத் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கொடியேற்றம், மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
இதனையொட்டி கோயில் வளாகத்தில், மாதா உருவம் குறித்த புனித கொடி ஊர்வலமும், தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியை புனிதம் செய்து கொடிகம்பத்தில் ஏற்றி வைத்தார். கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, குறைவான பக்தர்களுடன் எளிமையான முறையில் கொடியேற்றம் நடைபெற்றது.