தமிழகத்தில் நேற்று பெய்த கோடை மழையால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவியது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில், அதிகாலை முதலே மேகமூட்டமாக காணப்பட்டது. காலை 8 மணிக்கு திடீரென கருமேங்கள் சூழ்ந்து, குளிர்காற்றுடன் மழை பெய்தது.
இதனால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிகாலையில் சுமார் ஒருமணி நேரம் சாரல் மழை பொழிந்தது. இந்த மழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் பெய்த மழையில் நனைந்தபடி சிலர் ரசித்தனர்.
இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக பெரியகுளம், பழனியில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.