பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி மகன் ரவி (39). மாற்றுத்திறனாளியான இவருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் கடந்த 9 ஆம் தேதி இலவச மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த வாகனத்தின் பதிவுச் சான்றிதழுக்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முடநீக்கி தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும், அரியலூா் மாவட்டம், சாலையக்குறிச்சியைச் சோ்ந்த ஏ. பிரபுவை (42) அணுகியபோது, அவா் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
ஆனால் பணம் தர விரும்பாத ரவி, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாரின் ஆலோசனைப்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்ற ரவி, ரசாயனம் தடவிய ரூ. 2 ஆயிரத்தை பிரபுவிடம் அளித்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த துணைக் கண்காணிப்பாளா் ஹமசித்ரா தலைமையிலான ஊழல் தடுப்புப் போலீஸாா் பிரபுவை கையும், களவுமாக கைது செய்தனா். இதையடுத்து பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.