நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன். பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளரான இவரை கடந்த 30-ந்தேதி இரவு மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
இதற்கிடையே, ஜெகன் கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. பிரமுகர் பிரபுவை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், நெல்லையில் பாஜக பிரமுகர் ஜெகன் கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொலையை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியனை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாவட்ட பொறுப்பு காவல் ஆணையர் பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.