வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தடகள பயிற்சியாளர் நாகராஜனை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியுடன் இணைந்து, ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ என்ற, தடகள பயிற்சி அகாடமியை நடத்தி வருபவர், நாகராஜன், 59.மத்திய அரசு பணியில், ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளராக பணிபுரியும் இவர், சென்னை, நந்தனத்தில் வசிக்கிறார்.
இவர் தன்னிடம் பயிற்சி பெற்ற, 20க்கும் மேற்பட்ட வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது.இவரால் பாதிக்கப்பட்ட, 19 வயது வீராங்கனை ஒருவர், சென்னை, பூக்கடை மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார். நாகராஜன் மீது, ‘போக்சோ’ உள்பட, எட்டு சட்டப்பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த நாகராஜன், அளவுக்கு அதிமான துாக்க மாத்திரையை உட்கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.அதனால், ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவர், நலமுடன் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று மாலை, நாகராஜனை கைது செய்தனர்.இவர் மீது மேலும், மூன்று இளம் வீராங்கனைகள், நேற்று புகார் அளித்துள்ளனர்.

















