லஞ்சம் வாங்கிய குடிசை மாற்று வாரிய அலுவலர்!
சென்னை:
வீட்டு விற்பனை பத்திரம் வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அண்ணாநகர் கிழக்கு, அன்னை சத்யா நகரில், புருஷோத்தமன் என்பவருக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.வீட்டுக்கான தவணை தொகையை செலுத்திய நிலையில், விற்பனை பத்திரத்தை வழங்குமாறு, டி.பி.சத்திரத்தில் உள்ள, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில், பில் கலெக்டராக பணியாற்றி வந்த, பி.எஸ்.ரவி என்பவரிடம், 2009ல் புருஷோத்தமன் கேட்டு உள்ளார்.அதற்கு ரவி, லஞ்சமாக, 6,000 ரூபாய் கேட்டுள்ளார்.
இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில், புருஷோத்தமன் புகார் செய்தார். பின், போலீசார் அறிவுரைப்படி, புருஷோத்தமன், லஞ்ச பணத்தை கொடுத்த போது, ரவியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதிஓம்பிரகாஷ் முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குடிசை மாற்று வாரிய அலுவலர் ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.