“தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுதிக் கொடுக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மனு கொடுக்க வருகிறார்கள். இதற்காக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சிலர் மனு எழுதி கொடுத்து வருகிறார்கள். இதற்காக கூடுதல் பணம் கேட்பதாக அடிக்கடி புகார் வந்தது.
இந்நிலையில் இன்று நடந்த மனுநீதி நாளில் நடுநாலுமூலைக் கிணறு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிலர் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் ஆட்சியரிடம் நாங்கள் திருச்செந்தூரில் இருந்து வருவதற்கு 100 ரூபாய் செலவு செய்து வருகிறோம். ஆனால் இங்கு மனு எழுதுவதற்கு 50 ரூபாய் கேட்கிறார்கள் என்று புகார் கூறினார்கள். இதை அறிந்த ஆட்சியர் செந்தில்ராஜ் உடனடியாக தனது அலுவலகத்தில் இருந்து வெளியேறி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மனு எழுதும் பெண்களிடம் வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது மாற்றித் திறனாளியான அந்த பெண், “நான் ஒரு மனு எழுதுவதற்கு ரூ.50 கேட்பேன். ஆனால் அவர்கள் 30 கொடுப்பார்கள். இல்லை 20 கொடுப்பார்கள். சில பேர் பணம் தராமல் போய் விடுவார்கள். நான் இதை வைத்து தான் எனது காலத்தை கழித்து வருகிறேன் என்று கூறினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அவரிடம் “நீங்கள் இலவசமாக மனு எழுதிக் கொடுங்கள். உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் கிடைக்குமோ அதை நானே கொடுத்து விடுகிறேன். இனிமேல் நீங்கள் மனு எழுவதற்கு பணம் வாங்கக்கூடாது. இலவசமாக எழுதிக் கொடுங்கள் என்றார்.