ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி செட்டியார்பட்டி பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது ஊழல் மட்டும்தான் தமிழ்நாட்டில் வெற்றி நடை போடுகிறது என்று கூறினார்.
அப்போது அவர் பேசுகையில், “தொகுதி மாறி வந்திருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி ஒன்றும் செய்யாமல் இங்கு வந்து நின்று முயற்சி பண்ணி பார்க்கிறார். இங்கும் அவர் ஒன்றும் செய்யாமல் தான் இருப்பார் ஆகையால் அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க கூடாது.
ராஜேந்திர பாலாஜி எல்லாம் பேசுவார், எப்படி பேசக் கூடாதோ, அந்த அளவுக்கு இறங்கியும் பேசுவார். ட்ரம் வந்தாலும் பயமில்லை, ஒபாமா வந்தாலும் பயமில்லை எங்களுக்கு மோடி இருக்கிறார், ‘மோடி எங்கள் டாடி’ என்று பேசுவார்.
அதிமுகவினர் ஒன்றில் மட்டும் தெளிவாக இருக்கின்றனர். எந்த அளவுக்கு சொத்து வாங்கி போட முடியுமோ அந்த அளவிற்கு சொத்து வாங்குவதில் தெளிவாக இருக்கின்றனர். வெற்றி நடைபோடும் தமிழகம் என்று கூறுகின்றனர் ஆனால் ஊழல் மட்டும் தான் தமிழ்நாட்டில் வெற்றி நடைபோடுகிறது.
ராஜேந்திர பாலாஜி, மகேந்திரன் என்பவர் மூலம் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் குவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் இவர்கள் செய்த ஊழலால், 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை குறைக்கப்படும் என அதிமுகவினர் கூறினர். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 2 மடங்கு பால் விலை உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு, பணியிட மாற்றம் அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர்.
ராஜேந்திர பாலாஜி அடிதடியாக பேசக்கூடியவர் என இவருடைய கட்சி எம்.எல்.ஏ.வே கூறியிருக்கிறார். இவரால் கொலை செய்துவிடுவேன் மிரட்டியதாக கூறுகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் தகவல் தொழில்நுட்பத்தை இவர்கள் கொண்டு வந்ததாக, ஆனால் கடந்த 2000 ஆவது ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை புதிதாக உருவாக்கி தந்தவர். இந்த தகவல் தெரியாமல் ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.
ஒவ்வொரு ஊராகச் சென்று பிரசாரம் செய்யும் முதல்வர், செல்லும் வழியில் டைட்டில் பார்க் தொழில் பூங்காவை யார் கொண்டு வந்தது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இதெல்லாம் தெரியாமல் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்துக்கொண்டு இக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாக ஆட்சி இந்த ஆட்சி. மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி இது.
இவர்கள் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரவில்லை, முதியோர் உதவித்தொகை பெற்றுத்தர வில்லை, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சென்றால் 10 நாள் அலைந்தாலும் கூட பொருட்கள் கிடைக்கவில்லை.
இந்த பகுதி, நெசவாளர்கள் நிறைந்த பகுதி. நெசவாளர்களுக்கு வழங்கக்கூடிய 200 யூனிட் மின்சாரம் திமுக ஆட்சி அமைந்தவுடன் 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். நூல் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல். டீசல் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. முன்பு திமுக ஆட்சி இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை உயந்தால் மத்தியில் ஆளும் அரசு போராடியது இப்பொழுது இவர்கள் ஆட்சியில் கூடிக்கொண்டே போகிறது.