நெல்லை மாவட்டம் பேட்டை காவல் நிலைய சரகத்தில் கடந்த செவ்வாய் கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையருகே ஆஸாத் எண்ணெய் மில்லுக்கு வடபுறமுள்ள காலி இடத்தில் அடையாளம் தெரியாத வயது மற்றும் ஆண் பெண் கண்டு பிடிக்க முடியாத நிலையில் ஒரு நபர் காலில் இருந்து தலைவரை தீப்பிடித்து எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் பழையபேட்டை கிருஷ்ணபேரியை சேர்ந்த பொன் ஆறுமுகம்பிள்ளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 30) மற்றும் இவரது சகோதரியான செக்கடி தெருவை சேர்ந்த லெட்சுமணன் என்பவர் மனைவி மேரி (வயது 38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் மேற்படி இருவரும் அவர்களது பராமரிப்பில் இருந்து வந்த அவர்களுடைய பாட்டி சுப்பம்மாள் என்பவரை கவனிக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக அவரை ஒரு ஆட்டோவில் அழைத்து சென்று எரித்து கொன்றுவிட்டதாக குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்.
மேற்படி குற்றவாளிகள் இருவரும் இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள். பாட்டியை 2 பேத்திகள் பராமரிக்க முடியாமல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.