சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர் நகரில் கடந்த 19 ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது சிலர் வாலிபர்கள் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி காவல் அய்வாளர் தலைமையில் தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பட்டா கத்தியை கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய நபரான விஷ்வா(18) மற்றும் அவரின் நண்பர்களான கரண்(18), சக்திவேல்(18), சுரேஷ்(18), அருணாச்சலம்(20), முரளி(18) விக்கி (எ) விக்னேஷ்(18), ஐய்யனார்(18) ஆகியோர் கொண்டாட்டத்தின் போது தட்டிக்கேட்ட பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 8 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பட்டாகத்தி கைப்பற்றப்பட்டு அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பட்டா கத்திகளுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது தவறான முன்னுதாரனம் என்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எவரேனும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதோடு சட்ட ரீதியிலான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளார்.